லொஸ்லியாவுக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தாலும் கிடைத்தது , லொஸ்லியா பற்றி தாறு மாறாக எதிர்மறையான கருத்துக்கள் வரத்தொடங்கி விட்டன
லொஸ்லியாவுக்கு காதலில் அக்கறை இல்லை . தொழில் தான் முக்கியம் என்பது ஒருவர் லொஸ்லியா மீது வைத்த குற்றச்சாட்டு. இதை வாசித்தபோது எனக்கு தூக்கி வாரிப்போட்டது. அதை எழுதியவரின் மனப்பான்மை அந்தக்குற்றச்சாட்ட்டில் துல்லியமாகத் தெரிந்தது. அது தனி ஒருவரின் மனப்பான்மையாக எனக்கு தெரியவில்லை.ஓராயிரம் பேர் இதே மனப்பான்மையுடன் சுற்றிக்கொண்டு இருப்பார்கள்.
அதாகப்பட்டது காதலில் உள்ள ஒரு பெண், காதலை தவிர வேறு எதையும் சிந்திக்க கூடாது. விரைவில் திருமண பந்தத்தில் ஈடுபட்டு குழந்தைகள் பெற்று சமையல் பிள்ளை வளர்ப்பு என்று வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட வேண்டும். என்பது தான் அந்த நபர் சொல்லாமல் சொல்ல வருவது. அப்படி ஒரு பெண் இருப்பாளானால் அவள் ஒரு மங்கையர் குல மாணிக்கமாக , சிறந்த காதலியாக கணிக்கப் பெறுவாள். அவ்வாறு இல்லாவிடில் அவளின் காதல் சந்தேகிக்கப்படும், விமரிசிக்கப்படும், fake love , time passing love என பலவித அடைமொழிகளால் அழைக்கப்படும்.
இது என்ன கொடுமை சரவணா ? காதலிக்கிற ஒரு பெண் தனக்கு பிடித்த தொழில் துறையில் முன்னேற வேண்டும் என ஆசைப்பட கூடாதா? அதற்காக வெறி கொண்டு உழைக்க அவளுக்கு காலம் நேரம் அவகாசம் எடுக்கக்கூடாதா? அவள் அந்த முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது திருமணத்தை ஒத்தி வைக்கலாம் என எதிர்பார்ப்பது அவள் உரிமை இல்லையா ? நான் இங்கே லொஸ்லியாவை பற்றி மட்டும் எழுதவில்லை. லொஸ்லியா போல இருக்கிற எல்லாப் பெண்களுக்காகவும் தான் எழுதுகின்றேன்.
லொஸ்லியா விற்கு தொழில் தான் முக்கியம் என்பது ஒரு குற்றச்சாட்டாகவே குறிக்கப்பட்டிருந்தது. பொருளாதார சவால்கள் நிறைந்த இந்த காலத்தில் ஆணுக்கென்ன பெண்ணுக்கென்ன தொழில் முக்கியம் தான். காதலில் உள்ள ஆணும் பெண்ணும் காதல் காதலாக இருக்க தங்கள் தொழில் துறை, பொருளாதார மேம்பாட்டில் கவனம் செலுத்தியே ஆகவேண்டும். தொழில் துறையில் விரும்பிய மட்டும் வளர்ச்சியடைந்து தகுந்த பொருளாதாரத்தை கட்டமைத்தபின் திருமண பந்தத்தில் ஈடுபடும் போது அந்தக் காதல் இன்னும் இனிக்கவே செய்யும்.
காதலும் தொழில் வளர்ச்சியும் ஒன்றுக்கொன்று எதிரானவை இல்லையே. ஒன்று வளர்ந்தால் மற்றதும் வளரும் .
தங்களை, தாங்களே வளர்க்கின்ற இந்த காலப்பகுதியில் காதலர்களுக்கிடையே கருத்து மோதல்கள் ஏற்படத்தான் செய்யும். அதை காதலர்கள் பேசி தீர்த்து தங்களுக்குள் சமாதானமாகிக் கொள்வார்கள். ஒத்து வராவிட்டால் கண்ணியமாக பிரிந்து போவார்கள்.
இதில் மூன்றாம் நபருக்கு எந்தஅலுவளும் இல்லை. அடுத்தவன் காதலுக்கு fake love , time passing love என்று முத்திரை குத்த்துகிற அசிங்கத்தை செய்யாதீர்கள்.
No comments:
Post a Comment