Sunday 20 August 2017

பிக் பாஸ் சினேகன்

பிக் பாஸ் சினேகன்

சினேகன் உங்களை முற்றிலும் வெறுத்து ஒதுக்க முடியவில்லையே.

காயத்திரி, யூலி, ரைசா, நமீதா கூட்டத்துடன் உங்களை சேர்க்க முடியவில்லையே
.
உங்கள் கட்டிப்பிடி வைத்தியம் அறிவியல் ரீதியாக ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தாலும் பார்க்க சகிக்கமுடியவில்லை.  அருவருப்பாகத்தான் இருக்கிறது.  அது உங்களுக்கு தவறாக தெரியவில்லை.  ஆனாலும் இத்தனை கோடி மக்கள் வெறுக்கிறார்கள்.  அருவருப்புடன் பார்க்கிறார்கள்.  வெளியே வந்தபின்பு இது  பற்றி மறுபரிசீலனை செய்யுங்கள்.

பரணி விடயத்தில் நீங்கள் செய்ததெல்லாம் தவறு.  இரக்கமற்ற செயல்.  இன்று வரை உங்களுக்கு அது தவறாக தெரியவில்லை.  அதனால் மன்னிப்பும் கேட்கவில்லை.

புறணி பேசுகிறீர்கள்.  முகத்திற்கு முன் ஒன்றும் முதுகிற்குப் பின் ஒன்றும் பேசுகிறீர்கள்.     அதை நான் மன்னிக்கிறேன்.    வேறு எந்தப் பொழுது போக்கும் இல்லாத நிலையில் அதை விட்டால் வேறு என்னதான் பேசுவது.  அதை நீங்கள் புறம் பேசுவது என்று ஒத்துக்கொள்ளவில்லை.  அது ஒரு அலசி ஆராய்தலாக எடுத்துக்கொள்ளலாம்.  அதிலும் நீங்களும் வையாபுரியும் சேர்ந்து கதைக்கிற கதைகள் அறிவு பூர்வமாகவும் புத்திசாலித்தனமாகவும் இருக்கின்றன. சுஜா வருணி   வந்த முதல்நாள் கணேஷ் உதவி செய்யப்போக நீங்களும் வையாபுரியும் அதை கொச்சைப்படுத்தி நகைச்சுவை என்ற பேரில் வையாபுரி கட்டிப்புடி கட்டிப்புடிடா என்று பட்டுப்பாட நீங்கள் அதை ரசித்து இருவருமாக சேர்த்து வைத்த மரியாதை எல்லாம் இழந்து போனீர்கள்.

இவ்வளவு குறைகள் இருந்தும் உங்களை பூரணமாக வெறுக்க முடியவில்லை சினேகன்.  காரணம் உங்களுக்குள் ஒரு அழகிய கிராமத்து மனிதன் இருக்கிறான்.  கூட்டுக்குடும்ப வாழ்வின் பெறுமதிகளை நீங்கள் இங்கே பிரதிபலிக்கிறீர்கள்.  தோளில் துண்டைப்போட்டுக்கொண்டு சமைக்கிறீர்கள்.  சாப்பிட மனமில்லாமல் படுத்திருக்கிற சகோதரிகளுக்கு தட்டில் சாப்பாட்டைப் போட்டு அவர்களிடம் எடுத்துச் செல்லுகிறீர்கள்.  சாப்பிடும்படி வலியுறுத்துகிறீர்கள்.

யூலியின் திருகுதாளங்களை கமல் குறும்படம் போட்டுக்கட்டிய நாள் அது.  யூலிதான் குற்றவாளி ஓவியா குற்றமற்றவள் என்பதை நீங்கள் பூரணமாக நம்புகிறீர்கள்.  யூலி அழுது கொட்டுகிறது.  நீங்கள் அரவணைத்து சமாதானப் படுத்துகிறீர்கள்.  ஓவியா எங்கோ  தூரத்தில்   இருந்து கோபமாக கத்துகிறாள்.  "நீங்கள் இப்போதுகூட அவள் பக்கம்தான் நிற்கிறீர்கள்"  அப்போது நீங்கள் ஓவியாவுக்கு சொன்ன பதில் இன்னும் என் மனதில் நிற்கிறது.  "ஓவியா , அவள் அழுகிறாள் ஓவியா"  ஓவியாவுக்கு நீங்கள் சொன்ன பதில் இதுதான்.
இது எத்துணை ஆழமான வசனங்கள்.  ஒருத்தி தப்பு பண்ணியிருக்கிறாள்.  அவமானத்தில் கூனி குறுகி நிற்கிறாள்.  அந்த நேரத்தில் அவளுக்கு அரவணைப்பு தேவை.  அதை நீங்கள் ஒரு பாடமாக எல்லோருக்கும் சொல்லிக் கொடுக்கிறீர்கள்.  ஒரு பெரிய குடும்பத்தின் அழகிய பெரிய அண்ணனாக நீங்கள் நின்றீர்கள் .

அடிப்படையில் ஓவியாவை உங்களுக்கு பிடிக்காது.   ஆனாலும் அவள் தனித்து தவித்து மரண அவஸ்தை அனுபவித்த நேரத்தில் அவளை ஒரு சிறு குழந்தையை போல் தாங்கினீர்கள்.  அவளுக்கு ஓர் அன்னை ஆனீர்கள்.  தட்டில் சாப்பாடு எடுத்து வந்து சாப்பிடும் வரை காவலிருந்து தலையை வருடிவிட்டு, எல்லாமே அழகு செயற்பாடுகள்.  சிறு குழந்தைக்கு சொல்வது போல அவளுக்கு சிங்கம் சிகரற்று பிடித்த கதை சொன்னிர்கள்.  அவள் சிரிக்கும் அழகை பார்த்து மகிழ்ந்தீர்கள்.  எல்லாவற்றிற்கும் மேலாக பெண்கள் அறையில் அவள் படுக்க இயலாமல் அவதிப்பட்ட வேளையில் அவளை சாந்தப்படுத்தி ஆண்கள் அறையில் படுக்கவைத்தீர்கள்.  உங்கள் கால்களில் தலையை வைத்து அவள் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.  துளியும் காமம் கலக்காத செயற்பாடு அது.  அதை யூலி அடுத்த அறையிலிருந்து கொச்சைப் படுத்தியது  உங்களிற்கு இன்னும் தெரியாது.  ஓவியா வெளியேறிய பின்பு அவளுக்காக நீங்கள் வடித்த கண்ணீர் நாடகமாக எனக்கு தெரியவில்லை.

அதிகம் சந்தர்ப்பங்களில் நீங்கள் கிராமத்து மணம் கமழும் அன்பான பெரிய அண்ணனை படம் பிடித்துக் காட்டுகிறீர்கள்.  உங்கள் குறைகளையும் தாண்டி உங்கள் இயல்பான அன்பான அனுபவமான பக்கங்கள் எனக்கு தெரிவதால் உங்களை எனக்கு வெறுக்க முடியவில்லை 


No comments:

Post a Comment